பாலா,பார்த்திபன்,நாசர் போன்றோரின் படங்கள் வெளியாகும் போது, "கண்டிப்பா பாருங்க" என நண்பர்களிடம் சொல்லி,படம் நல்லா இல்லாமல் போனபின் நான் தலைமறைவாவது என் வாழ்க்கையில் அடிக்கடி நடக்கும் விஷயம்.
திரையில் இலக்கிய படைப்புகளைத்தரும் டைரக்டர் பாலாவின்படைப்புலகம்ஆச்சரியங்களும்
,முரண்பாடுகளும் நிறைந்தது. பாலாவின் கதைக்களம் யாரும் தொடாத விஷயங்களைத் தொட்டுச்செல்வது. வித்தியாசமான படம் எடுப்பவர்களின் படங்களில் வருவதைப் போன்றபுகைப்படர்ந்தகாட்சிகள்,
யதார்த்தமானசண்டைக் காட்சிகள் என்பதைத்தாண்டி, பாலாவின்படங்கள் மனசுக்குள் பரவும்.
நிறைய படங்கள் கொடுக்க வேண்டும் என்பதைத் தாண்டி, மகேந்திரன் போன்று குறைந்த படங்களை தரமானதாக தரவேண்டும் என்ற கவனம் பாலாவின் படங்களில் தெரியும். அடுத்தக் காட்சி என்ன என்பதை கணிக்க முடியாத திரைக்கதை அமைப்பு பாலாவின் மிகப்பெரியபலம்.
காமெடிக்காட்சிகள் கூட மனசை ஊடுவருவி , தன்னை மறந்து சிரிக்க வைக்கும். கேமிரா நகரும் திசை கூட ரசனைக்குரியது.எந்த வித பில்டப்பும் கொடுக்காமல், முக்கிய கதாபாத்திரம் கூட இறந்துபோக நேரிடும். கதைக்களம் பயமின்றி சுடுகாட்டிலிருந்துகூடத்தொடங்கும்.
கதைநாயகனின் வாழ்க்கை, பஞ்ச் டயலாக் இன்றி, தன்னை சுற்றி இருப்பவர்களை வைத்து புகழ்ந்துக் கொள்ளுதல் இன்றி, தன் பெருமைகளைத் தானே பறைச்சாற்றிக் கொள்ளும்துவக்க பாடல் இன்றி; இயல்பாய் ஓடும் நதியைப் போல நகரும்.
நடிக்கும்நடிகர்க்கு திரையுலகில்,முகவரி கொடுக்கும்.
படத்தில் பங்கு பெறும் அனைவருக்கும் சாதனை களமாகவே தெரியும். ரசிகர்களும் என்னவென்று கணிக்க முடியாத பதைபதைப்பு மனசுக்குள் இருக்கும்.
சேது தொடங்கி நந்தா, பிதாமகன், நான் கடவுள் என பாலா படைப்புகளில் இவையெல்லாம் தெளிவாய் தெரியும். சிலர் ஒரே மாதிரியான படங்கள் என சாடுவது உண்டு.மொத்ததில் பாலாவின் படங்கள் ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, விமர்சர்களுக்கும் நல்ல தீனி என்பது தேசாந்திரியின் முடிவு.
பாலாவின் குருநாதர் பாலு மகேந்திரா மற்றும் இளையராஜா ஆகியோர் இனி நிழல்மனிதர்களைப் பற்றி கதைக்களம் அமைக்க வேண்டாம் என்று வேண்டி,கிட்டதட்ட சத்தியமே வாங்கியிருக்கிறார்கள் என்பதால் பாலாவின் படைப்புலகம் எப்படி மாறியிருக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.