16 September 2010

வலி....

(தேசாந்திரி மற்றும் ஊர் சுத்தியைத் தொடர்ந்து„ உங்களுடன் சிறுகதையுடன் இணைவது.....By பொம்மி)

நான் வால்பாறை பேருந்து நிலையத்தில் எனது ஊருக்கு
செல்வதற்காக காந்திருந்தேன்.இன்னும் 10 நிமிடங்கள் இருப்பதால் காலை உணவு சாப்பிட போதுமான நேரம் இருப்பதாக எண்ணி,பக்கத்தில் பெரிய உணவு விடுதிக்கு சென்றேன். அளவான கூட்டம் இட்லிக்கு ஆர்டர்
கொடுத்தேன்.பின்னர்,ரோஸ்ட் ஆர்டர் கொடுத்தேன். ரோஸ்ட் வர தாமதமானது. பஸ் வரும் நேரமானதால், பாதி ரோஸ்ட்டை இலையில் வைத்து விட்ட கர்வத்தோடு, பணியாளை கோபமாக திட்டினேன்.

அவனும் சளைக்காது பதிலளித்தான்,"இங்கே லேட்டாகும் தெரிச்சுதானே வந்தே, உனக்கு காசு இருக்கிற திமிரா?" என்ற அவனின் வார்த்தைக்கு பதில் சொல்ல நேரமில்லாது, பில் தொகை ரூபாய் 55 ஐ வைத்து விட்டு விரைந்தேன்.

ஒடிவந்து பஸ்ஸில் பள்ளி மாணவர்களுடன் போட்டி போட்டு பஸ்ஸில் சீட் பிடித்து ஒரத்தில் ஒட்டிக் கொண்டேன். ஏற முடியாத சின்ன மாணவிகள் பின்னாலே பெரிய மூட்டைகளுடன் பஸ்ஸில் நிரம்பினர்.பஸ் நகர தொடங்கியது, தோள் பட்டையில் ஊசி குத்திய போன்ற வலி. ஏற்கனவே,உணவகத்தில் ஏற்பட்ட அவமானம் குத்திய திசை நோக்கி ஆத்திரமாய் திரும்பசெய்தது. இருப்பினும் அமைதி காத்தேன்...அங்கே, இரு பள்ளிச்சிறுமிகள் சுவாரசியமாக நேற்றைய நிகழ்ச்சிகளைஅசைபோட்டனர்.தொடர்ந்து அவர்களுடைய ஆசிரியர்களை இன்று எதிர் கொள்வதுஎப்படி என்ற பல்வேறு யுக்திகளை பற்றி பேசிக்கொண்டு வந்தனர்.
அடுத்த நிறுத்தில் மேலும் ஆட்கள் ஏற,இன்னும் கூட்டம் அதிகமானது, குத்தியது யார் என்று அறிய முயற்சித்தேன். முடியவில்லை.

பேச்சு தெளிவாக கேட்டது.

"ஏண்டி ரம்யா, என்ன சாப்பிட்டே?"

"போடி, அம்மா நேரத்தில் கூலி வேலைக்கு போய்ட்டாங்க, சாப்பாடு செய்ய நேரமில்லை".

"அடி, அப்புறம் என்ன பண்ணினே"

"இரண்டு ரூபா தந்தாங்க, மத்தியானம் சத்துணவு
சாப்பிடணும்"


இப்போது கூட்ட நெரிசலில் ஊசி குத்தல் அதிகமானது. திரும்பி பார்த்தேன்.இடது கையில் தொங்கிய பையில் எட்டிப்பார்த்த பென்சில் என் தோள் பட்டையை குத்திக் கொண்டிருந்தது. வலது கையில் அந்த சிறுமி இரண்டு ரூபாய் நாணயத்தை இன்னொரு சிறுமிக்கு காட்டிக்கொண்டுருந்தாள். "உனக்கு காசு இருக்கிற திமிரா?" வார்த்தைகள் ஊசி
போன்று குத்தியது. வாழ்க்கைப்பாடத்தின் ஏதோ ஒரு வரிக்கான அர்த்தம் புரிந்த்து போல் இருந்தது. இப்போது வலது பக்கம் தோளும், இடது பக்கம் இதயமும் வலித்தது.