ஐம்பது வருடம் வெண்ணையாய்
தின்று பாதுகாத்த உடம்பு
அசைவற்றுக் கிடக்கிறது.
நான் என்பது தொலைந்து
"அது" என அடையாளம்
மாறிவிட்டிருந்தது..
மெல்ல தகவல்
பரப்பப் பட்டது.
தங்கள் பயணத்திட்டங்களை
மாற்றி என் இறுதிப் பயணத்திற்காக
குவிந்தனர்.
காற்றில் அசைந்த
சாமியானாவில் காத்திருந்த
மனிதர்களுக்கு
"வரக்காப்பி"
வழங்கப்பட்டது.
நல்ல மனுசன்;
நல்ல சாவு
என உரக்கப்பேசினார்கள்..
மனசுக்குள்
என்ன ஓடிக்கொண்டிருக்கும்
என்னால் அப்போது கூட
கணிக்க முடியவில்லை.
பலர் பரபரப்பாக
நடமாடிக்கொண்டிருந்தனர்.
சிலர் மணி
பார்க்கத்துவங்கியிருந்தனர்..
என் கால் மாட்டில்
மனைவி மயங்கிக்கிடக்கிறாள்.
மகள் செய்வதறியாது கண்ணீர் மல்க..
சேதிக் கேட்ட என் மகன்
விமானம், ரயில் என மாறி மாறி
பயணித்து வந்துக் கொண்டிருக்கிறான்.
“எப்ப எடுப்பாங்க?”
யாரோ வினவ, வேறு யாரோ
விடையறுத்தார்கள்…
“கொஞ்சம் சீக்கீரம் எடுத்த
பரவாயில்லை…….”
இப்படியாய்….
இன்னுமாய்….
எந்த வித
நிகழ்வுகளையும்
உருவாக்காமல்…
யாருக்கும்
சிரமமின்றி….
எங்கோ அடையாளமின்றி
இறந்துப் போக வேண்டும்
என்பது என் ஆசை…
THANKS TO bharathbharathi.blogspot.com for this theme...